Skip to content
| | | |
| அண்ணா | மறைந்தாரா? | அன்புருவம் | மறைந்ததுவா? |
| என்னயிது | அநியாயம் | எவர்சொன்னார் | துயர்ச்செய்தி |
| திங்கள் | முகங்கொண்ட | தென்னாட்டுக் | காந்திமுகம் |
| எங்கே | மறைந்தது? | இங்குள்ளார் | மனதிலெல்லாம் |
| அண்ணாவின் | திருவுருவம் | அற்றுப்போய் | விட்டதுவோ? |
| சொன்னாலே | வாய்கூசும் | சொல்லாமல் | இருந்தாலோ |
| மனங்குமுறி | வெடித்துவிடும் | மடிந்துவிடும் | மனிதநேயம் |
| பகலென்றும் | இரவென்றும் | பாராமல் | அயராமல் |
| இணையில்லா | ஆட்சியினை | இந்நாட்டில் | ஏற்படுத்த |
| தூங்காமல் | கண்விழித்து | துவளாமல் | உழைத்ததனால் |
| தூங்குகிறார் | கல்லறையில் | துயில்எழுவார் | பின்ஒருநாள் |
| கல்லறையின் | உள்ளே | கண்ணயர்ந்து | தூங்குகிறார் |
| சில்லறையாய் | வந்தமனச் | சுமையெல்லாம் | இறக்கிவைத்து |
| தென்னாட்டு | மக்கள் | தெளிவோடு | வாழ்வதற்கு |
| தமிழ்நாட்டு | மக்கள் | தனித்துயர்ந்து | வாழ்வதற்கு |
| கழகத்தை | ஏற்படுத்தி | கலாச்சாரம் | சீர்படுத்தி |
| அழுத்தமுடன் | பேச்சாலே | அனைவரையும் | சீர்திருத்தி |
| எழுத்தாலே | மக்களிடம் | எழுச்சியினை | உண்டாக்கி |
| அழுத்தமுடன் | கொள்கைகளை | அடுக்கடுக்காய் | எடுத்துரைத்து |
| நாடகத்தால் | சினிமாவால் | நல்லபல | கலைத்திறத்தால் |
| நாடுதனில் | உள்ளோரை | நல்வழிக்கு | மீட்டுவந்த |
| அண்ணாவா | மறைந்துவிட்டார் | என்னயிது | அநியாயம் |
| அண்ணா | மறையவில்லை | அன்புருவம் | மறையவில்லை |
| தென்னாட்டுக் | காந்தியண்ணா | சென்னைப்பல் | கலைக்கழக |
| முன்னாலே | மெரினாவில் | முகிழ்ந்திருக்கும் | ஓர்சிறிய |
| கல்லறையின் | உள்ளே | கண்ணயர்ந்து | தூங்குகிறார் |
| அண்ணா | மறையவில்லை | அன்புருவம் | மறையவில்லை |
| பெண்ணாங்கு | காவிரிக்கும் | பெரும்புலவர் | வள்ளுவர்க்கும் |
| கண்ணகிக்கும் | கம்பருக்கும் | காவியத்துப் | புலவர்கட்கும் |
| சிலைவைத்த | அண்ணன்தன் | சிறப்பெண்ணி | மனம்புழுங்கி |
| சிலையாக | நிற்பவர்யார் | சிந்தியழு | வோர்யார்யார்? |
| மதறாஸ் | எஸ்டேட்டை | தமிழ்நாடு | ஆக்கியவர் |
| பதமான | பேச்சாலே | பகைவரையும் | மடக்கியவர் |
| உலகத்தமிழ் | மாநாட்டை | ஒப்பின்றி | நடத்தியவர் |
| கலகமிலா | நல்லாட்சி | கண்டுயர்ந்த | பேரறிஞர் |
| படியரிசித் | திட்டத்தைப் | பாங்குடனே | துவக்கியவர் |
| படிப்படியாய்க் | கிராக்கிப்படி | ஊழியர்க்கு | உயர்த்தியவர் |
| நம்மினத்தைக் | காப்பதற்கும் | நாட்டுநலம் | காப்பதற்கும் |
| மும்முனைப் | போராட்டம் | முத்தமிழ்க்கோர் | போராட்டம் |
| விலைவாசிப் | போராட்டம் | இந்திக்கோர் | போராட்டம் |
| மலைமலையாய்த் | தடைவரினும் | மனந்தளராப் | தடைமீறல் |
| எத்தனையோ | போராட்டம் | எத்தனையோ | தடைமீறல் |
| எத்தனையோ | சிறைவாசம் | எத்தனையோ | பெருந்தொல்லை |
| இத்தனையும் | தாங்கும் | இதயத்தைப் | பெற்றஅண்ணன் |
| செத்திட்டார் | என்கின்ற | சேதி | அறிந்தவுடன் |
| விழுபவரும் | எழுபவரும் | விம்மிவிம்மி | அழுபவரும் |
| தொழுபவரும் | நைந்துருகி | துயரத்தால் | மனங்கலங்கி |
| வாடுகின்ற | தம்பிகள்யார் | வற்றாத | கண்ணீரால் |
| ஓடுகின்ற | நதியிலண்ணன் | உடல்கழுவி | வைப்பவர்யார் |
| இதயத்தைக் | கடன்வாங்கி | ஏழைகளை | வாழ்விக்க |
| உதவத் | துடித்திருக்கும் | உத்தமர்கள் | எத்தனைபேர் |
| செம்மொழி | என்றேதமிழை | சீர்தூக்கி | வாழ்விக்கும் |
| நம்தம்பி | எத்தனைபேர் | நானறிய | வேண்டாமா |
| என்பதனை | அறிவதற்கு | ஏற்பட்ட | ஆசையினால் |
| மண்புதைத்த | கல்லறைக்குள் | மனம்புதைத்து | சொல்புதைத்து |
| அண்ணன் | உறங்குகிறார் | அறிவாலயத் | தலைமை |
| மன்னன் | உறங்குகிறார் | மற்றென்ன? | எந்நாளும் |
| மொழியோடு | மொழியாக | நாட்டோடு | நாடாக |
| உயிரோடு | உயிராக | உணர்வோடு | உணர்வாக |
| அறிவோடு | அறிவாக | அன்போடு | அன்பாக |
| நீதியிலே | நேர்மையிலே | நெறிமாறாச் | செயல்களிலே |
| அண்ணா | இருக்கின்றார் | அறிஞர் | இருக்கின்றார் |
| ஆண்டுநூ | றானாலும் | அழிவின்றி | நம்முடனே |
Back to Top