உண்டா – இல்லையா?

அந்திமாலை வந்தபோது
அங்குதென்றால் தொட்டபோது
இந்தமாமன் நினைப்புனக்கு
வந்த தில்லையா?
தூக்கமின்றி கண்தவிக்க
ஏக்கத்திலே மனந்தவிக்க
தீக்குளித்த உணர்விலே நீ
நொந்த தில்லையா?
கொந்தளிக்கும் கடலைப் போல
குமுறுகின்ற மேகம்போல
தத்தளிக்கும் படகுபோல
ஆடவில்லையா
பொன்சிவந்த முகத்தினிலே
பூ” சிதறும் தேன்துளிபோல்
கண்கசிந்து என்னையெண்ணி
வாட வில்லையா?
மன்மதனும் வில்லெடுத்து
மலர்க்கணையை வீசும்போது
உன்மனதில் என்னுறவு
தீண்ட வில்லையா?
முல்லை” நீலம் ‘மா’ அசோகு
தாமரைசேர் ஐ மலர்கள்
மோக தாக விரக வேகம்
தூண்ட வில்லையா?
ஆட்டிவைக்கும் உணர்வு பொங்கி
அடங்கிடாமல் மீறும் போது
போட்டிபோட்டு என்நினைப்புத்
தாக்க வில்லையா?
பூகம்பத்தின் நெருப்பலைகள்
சுனாமி போல சீறிப்பாய்ந்து
புரட்டிப்போட்டு வறுத்தெடுத்துத்
தீய்க்க வில்லையா?
மாது நீயும் மனத்திரையில்
சூது கொண்டு மறைத்திதனை
ஏதுமறி யாதவள்போல்
ஏங்க வில்லையா?
உண்டா – இல்லையா?

கருப்பும்-வெறுப்பும்

காக்கையொடுகுயிலினமும்யானை மற்றும்
கருப்பாடு கருங்குரங்கு கரடி தானும்
பார்க்கும்விழி நெருப்பான் கருஞ்சி றுத்தை
பால்கொடுக்கும் எருமைமுதல் கரிச்சான் எல்லாம்
நோக்குநிறம் கடுங்கருப்பு ஆன தாலே
நொந்துமனம் வெந்ததுண்டா? மனிதன் மட்டும்
தீக்குள்விரல் வைத்ததைப்போல் கருப்புப் பெண்ணை
தீண்டாப்பொரு ளாக்கியதை ஒதுக்க லாமா?
சந்தனத்தைத் தரும்மரமும் அழகோ; முத்தைத்
தருகின்ற சிப்பியென்ன அழகோ; தங்கம்
தந்தசுரங் கம்என்ன அழகோ; பூத்த
தாமரைவாழ் சேறென்ன அழகோ; வைரம்
எந்தவிதம் அழகாகும் பட்டை இன்றி
இனியதேன் அழகோ; ஈ மொய்த்த தன்றோ!
பந்தங்கள் தொடர்கதையாய் வளர்த்துக் காக்கும்
பாசமலர் கருப்பென்றால் குறையோ சொல்வீர்!
கருப்பாக குயிலிருந்தும் குரலி லினிமை
காட்டாமல் போனதுண்டோ? தங்கம் மண்ணில்
இருந்தாலும் வைரமொடு ஒளிகூட் டாதோ?
எழில்முத்து அதன்மதிப்பு குறைவ துண்டோ?
மருந்துக்கும், விருந்துக்கும் தேனே யன்றோ!
மணங்கமழச் சந்தனந்தான் மறுத்த துண்டோ?
கருப்பாக இருக்கும்பெண் சமுதா யத்தைக்
காக்கின்ற குலமகள்தான் வெறுக்க லாமோ?
படைப்பினிலே கருப்பென்ன, சிவப்பு என்ன?
பண்பு “குண நலன்” மாறிப் போவ துண்டோ?
எடைபோட்டுப் பார்க்கின்றீர்! அவளும் தாய்மை
எய்திப்பின் சந்ததியை வளர்த்தல் காண்பீர்!
தடைபோடும் மணப்புழுக்கம் தாண்டி வாரீர்!
தளிருடலாள் இரத்தம்அது சிவப்பு காண்பீர்!
கடையோரம் மனதிலிதை ஏற்றுக் கொண்டு
கருணையுடன் வாழ்வளிப்பீர்! பெருமை சேரும்!

அவையடக்க வணக்கம்

பண்அம் பலப்படுத்தும் பாட்டரங்கம் வந்திருக்கும்
என்அன்பிற் குறியோரே! ஏற்றமிகு தமிழறிஞர்
பாகற்காக் கவிஞன்நான் பாவாடை நானறியேன்!
(“பா” கற்காக் கவிஞன்நான் “பா”வாடை நானறியேன்!)
மேகக் கருக்கல்போல் மென்துளிகள் நான்தெளிப்பேன்
தொடையுண்டு இலக்கணத்தில் தொட்டதில்லை நானதனை
அடியுண்டு இலக்கணத்தில் அடிபட்டுப் பழக்கமில்லை
நேருண்டு நிறையுண்டு நெருங்கிநான் சென்றதில்லை
காயுண்டு கனியுண்டு கடித்ததனைப் பார்த்ததில்லை
கருவிளத்தைக் கூவிளத்தைக் காசுமலர் நாள்பிறப்பைக்
காரிகை அலங்காரம் கண்டதில்லை கேட்டதில்லை!
எழுத்தசையைச் சீர்தளையை எதுகையொடு மோனைகளை
அழுத்தமுடன் கற்றறியேன்; ஆனாலும் அவைப்பெரியீர்!
அழுத்தமுடன் பாப்பாட அரங்கேறி வந்துவிட்டேன்
பழுத்தவனோ, காயோ, பார்த்தறிவ துங்கள்கடன்
வெண்பா கலிப்பா விருத்தப்பா சந்தப்பா
எந்தப்பா வையும்நான் ஏறிட்டுப் பார்த்ததில்லை!
அப்பாவிற் கப்பா அருங்கவிதை பாடியதால்
இப்போநான் கவியரங்கில் இயல்பாகப் பாடவந்தேன்
குற்றங் குறையிருந்தால் கூறுங்கள் திருந்துகிறேன்
கொற்றவனின் முன்னே குடிமகனாய் வணங்குகிறேன்!

கவியரங்கத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்

ஆண்டமொழிச்சிறப்பைஅழகுதமிழ்மரபுதனை
மீண்டும்நிலைநிறுத்தமேடைக்குவந்தவரே!
வில்லெடுத்துப்போர்தொடுக்கும்வீரமறவர்போல்
சொல்லெடுத்துப்போர்தொடுக்கும்சுழிமுனையைக் கற்றவரே!
மாவரங்கம்பலகண்டமாத்தமிழின்சீர்கொண்ட
பாவரங்கத்தின்தலைமைப்பாங்குதனைஏற்றவரே!
இமைத்தவிழிதிறப்பதற்குள்ஏழாயிரம்கவிதை
அருந்தமிழிலியற்றுமாற்றல்அத்தனையும்பெற்றவரே!
விட்டிழுத்தமூச்சுவெளியேறும்முன்னாலே
கொட்டிக்குவித்திடுவீர்கோடிக்கவிதைகளே!
தட்டிஎழுப்புவதில்தமிழுணர்வைஊட்டுவதில்
திட்டமிட்டுப்பாடுவதில்திறன்மிகுந்தபெருங்கவிக்கோ
முப்பழத்தின்சுவைத்திறல்கள்வாமுசேதுராமன்தன்
செப்பும்கவிதையிலேசெரிந்திருக்கும்காண்போமே!
மன்றத்தில்மணியோசைஇவரின்பேச்சு!
மணிமுடிதான்தமிழுக்குஇவரின்ஆற்றல்!
குன்றத்துவிளக்காகஇலக்கியத்தேன்
குடங்குடமாய்வார்த்தளிக்கும்தமிழின்வள்ளல்!
என்றைக்கும்இவர்தொண்டுதமிழுக்குண்டு!
இவரறியாநூலில்லைதேர்ந்ததேனீ!
கன்றுக்குத்தாய்மடிதான்சொர்க்கம்,இங்கே
கவிப்பெருங்கோதான் எங்கள்கவிதைசொர்க்கம்!

கவிஅவைக் கவிஞர்கள்

பொங்குமெழில் கவியரங்கை ஆள வந்த
புகழ்க்கவிஞர் கணக்காயன் கண்ம தியன்
சங்கம்வளர் தமிழ்மார்சல் முருகன் காரைக்
கிழாரோடு அசோக்ராசு தியாக ராசன்
மங்காத தமிழிலக்கு வனாரின் மைந்தர்
மானமிகு திருவள்ளுவர் சென்னை ஆண்ட
தங்குபுகழ் சாகணேசன் ஆண்டவ ரோடு
சவகர்லால் ராஜேந்திரன் டான்ஸ்ரீ குமரன்
டத்தோஸ்ரீ சாமிவேலு செங்குட்டுவன்
இரபியுதீன் அயூப்போடு சேக்அப் துல்லா
டத்தோஆம் நடராஜா அருளின் தந்தை
பேராயர் எஸ்றாசற் குணம்போன் றோர்கள்
இத்தேசம் எத்தேசம் தமிழி ருக்கோ
இவர்களங்கே சிறந்திருப்பர் பசீரலி அப்பாஸ்
உத்தேசம் பலநண்பர் பெயரைச்சொல்லி
உவந்துரைக்க மனமுன்டு நேரம் இல்லை!

களிப்புரை

கவிமாமணி – உனது
கவி “மா” மணி!
அறந்தைத்திருமாறா! நீ என்ன
அன்னைத் தமிழின் ஆணிவேரா!
அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு
வரந்தாங்கி நிற்கிறது!
சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு
ஏற்றம் பாட்டிலுண்டு!
மரபுக் கவிதை – உனக்கு
உறவுக் கவிதையோ!
காவியத் தமிழோ – உன்கவிதை
ஓவியத் தமிழோ!
உன்னை வரவேற்கும் – வருங்கால
சென்னைத் திரையுலகம்!
வாழ்கநீ பல்லாண்டு –
வளமானதமிழ்ச் சொல்லாண்டு!
நிமிர்ந்து
நெஞ்சுயர்த்தி வாழ்த்தும்

கவிஞர். காசி முத்துமாணிக்கம்

Back to Top